பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தனது இசையால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர். அதே சமயம் கடந்த 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதைத்தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசியாக பிடி சார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அதன்படி ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. அந்தப் படத்திற்கு கடைசி உலகப் போர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். நேற்று (ஜூலை 18) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் போர் சம்பந்தமான கதைக்களம் என்பது தெரியவந்தது. மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவர உள்ளன. அடுத்ததாக இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் சில தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நடிகை அனகா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். நடிகை அனகா ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நடித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.