கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எஃப் சாப்டர் 1. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் திரைக்கு வந்த பின்பு இந்திய அளவில் பிரபலமானது. திரும்பிய பக்கம் எல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான். மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரசாந்த் நீல், மீண்டும் யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த 2022-ல் வெளியான நிலையில் முதல் பாகத்தை விட அதிகளவு வசூலை வாரிக் குவித்தது. 100, 500 இல்லை, கிட்டத்தட்ட 1250 கோடி வரை வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தற்போது பிரசாந்த் நீல், சலார் 2, NTR31 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர், அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பிலும் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் யாஷ் தனது 19ஆவது படமான டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு யாஷின் 20வது படம் கே ஜி எஃப் 3 தான் என்று சொல்லப்படுகிறது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம்தான் மூன்றாம் பாகத்தையும் தயாரிக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.