இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சமூகத்தில் சொல்லத் தயங்கும் விஷயங்களை துணிச்சலாக சொல்லி இருக்கும். இதன்மூலம் பல்வேறு தரப்பினரிடையே இப்படங்கள் பாராட்டுகளைப் பெற்றது. அடுத்ததாக இவரது இயக்கத்தில் வாழை எனும் திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் இப்படம் நேற்று (ஆகஸ்ட் 23) திரையிடப்பட்டது. மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாரி செல்வராஜ், “நான் இயக்கிய படங்களுக்கும் எனக்கும் நேரடி தொடர்பில்லாமல் என்னால் அந்த படத்தை இயக்க முடியாது. பரியேறும் பெருமாள் படத்தை யாராலும் ரீமேக் செய்ய முடியவில்லை. ஏனென்றால் எனக்கும் அந்த படத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரு இயக்குனருக்கும் படத்திற்கும் நேரடி தொடர்பு இருந்தால்தான் அது இன்னும் உண்மையாகவும் எமோஷனலாகவும் இருக்கும். எந்தக் கதையுடன் நேரடி தொடர்பு இருக்கிறதோ அந்த கதைகளை வலுப்படுத்தி அதை படமாக உருவாக்கி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், துருவ் விக்ரமின் பைசன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.