கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரை இன்று தனிப்படை போலிசார் கைது செய்தனர். இதனிடையே, சிறப்பு விசாரணை குழுவிடம் சிவராமன் மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்த நிலையில், அந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான இருவரிடமும் தனி தனியே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.