மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.
மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை, மத்திய அரசின் 60% பங்களிப்புடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
2024-25ஆம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 4 தவணைகளில் ரூ.2 ஆயிரத்து 152 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கான முதல் தவணையாக ரூ.573 கோடியை கடந்த ஜூன் மாதமே மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் திட்டத்திற்கு இதுவரை பதில் வரவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களுக்கான நிதியை எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் நிலையில், மத்திய அரசு நிதியை விடுவிக்காததால் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசின் நிதியில் எஸ்.எஸ்.ஏ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.