திருப்பூரில் 107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 6 தலைமுறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி மூதாட்டியிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் 107 வயது மூதாட்டி பேச்சியம்மாள். வயது முதிர்ந்தபோதும் தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்ளும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் பேச்சியம்மாள் நடமாடிக் கொண்டிருக்கிறார். தங்கள் குடும்பத்தில் ஆலமரத்தின் அடி வேராக இருக்கும் மூதாட்டி பேச்சியம்மாளுக்கு 107வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக பேச்சியம்மாள் 107 என்ற வாட்ஸ்ஆப் குழு தொடங்கி விழா ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் காலை உணவு, மதிய விருந்து, வள்ளி கும்மியாட்டம், பரதம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூதாட்டி பேச்சியம்மாளின் 107வது பிறந்த நாளில் 600-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு நல் ஆசியை பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்வில் தங்களது தந்தை தாயுடன் பிறந்த உறவுகளைத் தவிர்த்து, இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட உறவுகள் தெரியாமல் உள்ள இளம் தலைமுறை உறவு பிள்ளைகளுக்கு, உறவுகளை அறிமுகப்படுத்தினர்.
இந்த விழாவில் பங்கேற்ற இளம் தலைமுறையினரும் தனது உறவினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தது போல அனைத்து சூழலிலும் ஒற்றுமையாக இருந்து உறவுகளை வழிநடத்தி, அடுத்து வரும் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தி பழக்கி செல்வது என உறுதியேற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.