தருமபுரியில் ஒட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை, ஷூவை கழற்றி தாக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் காவேரி என்பவர், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிரிபுந்து வருகிறார். இவர் மருத்துவமனைக்கு எதிரேயுள்ள ஓட்டலில் நாள்தோறும் உணவு சாப்பிடுவது வழக்கம். சாப்பிடும் உணவிற்கு முழுமையாக பணத்தை தராமல், பிறகு தருவதாக கூறி சென்றுள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட எஸ்.எஸ்.ஐ காவேரி, பின்னர் தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று மீண்டும் காவேரி ஓட்டலில் சாப்பிடவந்தபோது, ஓட்டல் உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ், முதல்நாள் சாப்பிட்ட உணவுக்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ காவேரி, முத்தமிழை அவதுறாக பேசி மிரட்டல் விடுத்தார். மேலும் தனது ஷுவை கழற்றி, தாக்க முயன்றார். அவரை கடை ஊழீயர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் உத்தரவின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக உதவி எஸ்.பி., சிவராமன், கடை உரிமையாளர் மற்றும் எஸ்.எஸ்.ஐ காவேரியிடம் விசாரணை நடத்தினார். சிசிடிவி அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் எஸ்.எஸ்.ஐ காவேரி அத்துமீறியது உறுதியான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவிட்டார்.