நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பின்னர் எம். குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதேசமயம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை, பிரதர், ஜீனி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அடுத்ததாக தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் ஜெயம் ரவி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டானார் ஜெயம் ரவி. ஆனால் ஒரு சில காரணங்களால் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியால் நடிக்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்பராஜ், ஜெயம் ரவியிடம் கதை ஒன்றை சொல்லி இருப்பதாகவும் அதற்கு ஜெயம் ரவி ஓகே சொல்லிவிட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இவர்களது கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் கார்த்திக் சுப்பராஜ் தான் இந்த படத்தினையும் தயாரிக்கப் போகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கார்த்திக் சுப்பராஜ் தற்போது சூர்யா 44 திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இதனை முடித்துவிட்டு ஜெயம் ரவியை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.