கோவை சாய்பாபா காலனி ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி அளவில் இருந்து திடீரென கனமழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராத விதமாக மழைநீரில் சிக்கிக் கொண்டது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலம் அரசுப்பேருந்தை மீட்டனர். இதனிடையே, கோவையில் நேற்று பெய்த கனமழையின்போது இதே பாலத்தில் தனியார் பேருந்து சிக்கிக்கொண்டது குறிப்பிடப்பட்டது.