Homeசெய்திகள்அரசியல்தமிழர்கள் இந்திய குடிமக்கள் தான்; ஹிந்தி காரர்கள் அல்ல- தமிழர் விடுதலை கழகம்

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தான்; ஹிந்தி காரர்கள் அல்ல- தமிழர் விடுதலை கழகம்

-

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தானே தவிர ஹிந்தி மொழி பேசக் கூடியவர்கள் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவியை போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் ஓர்மையை, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் ஆளுநர் ஆர் என் ரவி உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக இந்திய ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இங்கே செயல்பட்டு வரக்கூடிய ஆளுநர், அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் எதிரான விணைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். தமிழ்நாடு அரசின் வரிப்பணத்திலும், தமிழ்நாட்டு அரசின் மாளிகையிலும், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பிலும் வாழக்கூடிய ஆளுநர் ஆர் என் ரவி தொடர்ச்சியாக தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல உடனடியாக எதிர்க்கப்பட வேண்டியது.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மீது எதிர்ப்புணர்வை காட்டி வரக்கூடிய இந்திய ஒன்றிய அரசு ஆளுநர் மூலமாகவும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மீது இந்தியையும் இந்திய உணர்வையும் திணித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்திய குடிமக்களே ஒழிய ஹிந்தி காரர்கள் அல்ல என்பதை இந்திய அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பது என்பது தமிழ்நாட்டு மக்கள் மீது இந்திய ஒன்றிய பாஜக அரசு சுமத்தப்படக்கூடிய ஒரு வன்முறையாகும். தமிழ்நாட்டு மக்கள் எந்த ஒரு மொழியையும் விரும்பிப் படிக்க இந்த மண்ணில் தடை ஏதுமில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு இரு மொழிக் கொள்கையாக தமிழையும் ஆங்கிலத்தையும் வைத்திருக்கும் பொழுது புதிதாக ஒரு மொழியை திணிக்க நினைப்பது என்பது மக்கள் மீது ஒன்றிய அரசு தணிக்கும் வன்முறையாகவே கருதப்படும்.

The Governor 

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஆளுநர் என்பவர் சிதைத்து பாடி இருப்பதும் அதில் உள்ள முக்கியமான வரியான “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” எனும் வரியை விடுத்து பாடி இருப்பது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் எனும் சொல் இந்த மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகவும், இந்திய தேசிய வாதத்திற்கும், சனாதனத்திற்கும், எதிரான சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூக சமத்துவத்திற்கான சொல்லான, மனித ஏற்றத்தாழ்வுகளை நீக்கி மக்கள் எல்லோரும் சமம் என்று சொல்லக்கூடிய திராவிடம் எனும் சொல்லை தமிழர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு சொல்லாகவே தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திராவிடம் என்பது சாதியவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும், தமிழ் தேசியத்தை மறுத்து இங்கே இந்திய தேசியத்தை திணிக்க துடிக்கும கூட்டத்தினருக்கு எதிரான சொல்தானே ஒழிய தமிழர்களுக்கு எதிரான சொல் அல்ல.

திராவிடம் என்பதின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்துள்ள சனாதனவாதிகளும், வடஇந்திய தேசியவாதிகளும், சாதி, மத வாதிகளும் திராவிடத்தை எதிர்ப்பது என்பது பெரிய விந்தை அல்ல. திராவிடம் என்பது தமிழ்நாட்டின் தனிப்பெரும் சொல். இந்த திராவிடம் என்பதை நீக்கிப் பாடக்கூடிய இந்த இந்திய ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஆளுநர் இந்திய ஒன்றிய அரசின் தேசிய கீதமாக பாடக்கூடிய தேசிய கீதத்தில் உள்ள “திராவிட உத்கல பங்கா” எனும் அந்த வரியை நீக்க தயாராக இருக்கிறாரா? அந்த வரியை நீங்களாக பாடுவாரா? என்பதை உணர்த்த வேண்டும். தமிழர்கள் தொடர்ச்சியாக தேசிய கீதத்தை மிக்க மரியாதையோடும் கண்ணியத்தோடும் பாடி வருகிறோம். இந்திய அரசு இப்படி தமிழர்களையும், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு உணர்வையும் தொடர்ந்து புறக்கணிக்குமேயானால் தொடர்ச்சியாக இந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழ்நாட்டை பிரித்துக் கொடுத்துவிடலாம். தமிழ்நாட்டிலிருந்து வரி வருவாய் மற்றும் இன்னும் பல வழிகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்துச் செல்லும் இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும், தமிழ்நாட்டின் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது என்பது கண்டனத்திற்குரியது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிற்கு எதிரான தமிழ்நாட்டு விடுதலை உணர்வு என்பது கண்டிப்பாக மக்களுக்கு ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இனியும் இந்திய ஒன்றிய அரசு இப்படி கங்காணிகளை வைத்து ஆழம் பார்க்கும் செயலை விடுத்து தமிழ்நாட்டு உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக ஆர் என் ரவி நீக்கப்பட வேண்டும். மாறாக தமிழ்நாட்டு உரிமைகளை மறுத்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டினால் தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். இவ்வாறு சுந்தரமூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

MUST READ