கோவையில் மாமியாரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பாக்சுக்கு,ஜெனரேட்டரில் இருந்து மின்இணைப்பு கொடுத்தபோது நிகழ்ந்த தீ விபத்தில் மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி ராமலட்சுமி என்பவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கணபதியில் உள்ள அவரது வீட்டில் ஃபிரீசர் பாக்சில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை ராமலட்சுமியின் உறவினர்கள், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தனர்.
அப்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பிரீசர் பாக்ஸ்க்கு மின்சாரம் தடைபடாமல் கிடைப்பதற்காக ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓடிக் கொண்டு இருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த விளக்கில் இருந்து தீப்பொறி பட்டு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இனதால் அந்த அறையில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் ராமலட்சுமியின் மருமகள் பத்மாவதி உள்ளிட்ட 4 பேர் அறைக்குள்ளே சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளனர்.
அவர்களை கதவை உடைத்து மீட்ட உறவினர்கள், 4 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்மாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பானுமதி , ஶ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.