விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009ஆம் ஆண்டு பதிவுசெய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை 3-வது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ஜெயம்ரவி, அவரது மனைவி ஆர்த்தி நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, விவகாரத்து வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.