தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேங்காய்களை கீழே போட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகப்படியான தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக இந்த தொழிற்சாலைகளுக்கு கோவை, பொள்ளாச்சி, நெகமம், சுல்தான்பேட்டை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தேங்காய் மட்டை மூலம் காயர் பித் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிலை பெரும்பாலும் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் செய்து வருகின்றனர்.
மேலும் இதற்காக விவசாயம் செய்யாத நிலங்களை குத்தகைக்கு எடுத்து காயர் பித்தை கொட்டி உலர வைத்து வருகின்றனர். இந்நிலையில் காயர் பித் உலர வைக்கும் போது அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கழிவுகளால் விவசாயம் மற்றும் நீர் நிலைகள் மாசு படுவதாக சிலர் கூறி வருவதாகவும் இது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உட்பட காயர் பித் தொழில் செய்யும் மலைவாழ் மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உண்மைக்கு புறம்பான தகவல்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து எடுத்து வந்த தேங்காய் மற்றும் தேங்காய் மட்டைகளை கீழே போட்டு மாவட்ட நிர்வாகம் இது குறித்து நேரில் ஆய்வு செய்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும் என அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் துப்பாக்கியுடன் வலம் வந்த பிரபல ரவுடி – அயனாவரத்தில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்..!