கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த கட்டிட தொழிலாளி, கள்ளக்காதலன், மனைவி, மனைவியின் சகோதரி மீது நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு கோரிக்கை விடுத்து அழுது வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த நிலையில் தற்கொலைக்கு தூண்டிய மனைவி சுனிதாவை கைது செய்து இரணியல் போலீசார் சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் பெஞ்சமின் (47). வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுனிதா (45). இவர்களுக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
அப்போதில் இருந்தே கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே கொன்னக்குழிவிளையில் இருந்த குடும்பமாக வீட்டை விற்று விட்ட பெஞ்சமின் நுள்ளிவிளை அடுத்த மணக்காவிளையில் வீடு கட்டி மனைவியுடன் வசித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இது குறித்து உறவினர்கள் வெளிநாட்டில் இருந்த பெஞ்சமினுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் பெஞ்சமின் ஊருக்கு வந்தார். மனைவி சுனிதா காணாதது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தான் பெஞ்சமின் கடந்த புதன்கிழமை மணக்காவிளை வீட்டில் விஷமருந்தி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெஞ்சமின் பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே அவர் தனது பேஸ்புக்தளத்தில் அழுது கதறியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது;
ஐயா எஸ்பி ஐயா, 19 வருஷம் என் மனைவியை ராணி மாதிரி வைத்திருந்தேன். என் குடும்பத்துடன் வீட்டில் இருந்தேன். அப்போதே அவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்துள்ளது. அந்த வீட்டை என் மனைவி சொன்னாள் என்று ₹ 33 லட்சத்திற்கு விற்று விட்டேன். ஒன்றாம் பிரதி இந்த கள்ளக்காதலன். அவனை விடாதீர்கள். என் சாவுக்கு காரணம் சைஜு, சுனிதா, ஷீலா. என்று பேசியபடியே அம்மா அம்மா எனக்கூறி கதறி அழுகிறார். இன்னைக்கும் என் வீட்டிற்கு வந்தாள். என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுங்கள். அதை நான் மேலே இருந்து பார்ப்பேன்.
என்ன பெத்த கடவுளே அவர்களை விடாதீர்கள். 19 வருஷம் இந்த சைஜூ என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றிருக்கிறான். விடாதீர்கள். அவன் வீட்டில் தான் அவளும் இருக்கிறாள். திருவந்திக்கரை சைஜு. இது மட்டும் எனக்கு தெரியும். எஸ்பி ஐயாவை என் வியாகுலமாதா அன்னையாக கருதுகிறேன். நடவடிக்கை எடுங்கள். மீண்டும் மீண்டும் என் சாவுக்கு காரணம் 3 பேரும் என கூறி அடிக்கடி நெஞ்சில் அடித்து அழுகிறார். என் மனைவியை விட்டு மாற முடியவில்லை. அவனை விடாதீர்கள். இவ்வாறு அந்த வீடியோ முடிகிறது.
13.09 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் 10-க்கும் மேற்பட்ட முறை சைஜு (கள்ளக்காதலன்), சுனிதா (மனைவி), சீலா (மனைவியின் சகோதரி) 3 பேரையும் விடாதீர்கள் என கூறி கதறி நெஞ்சில் அடித்து அழுகிறார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மனைவி சுனிதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சைஜு மற்றும் மனைவியின் சகோதரி சீலா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் வீடியோ வெளியிட்டு கதறிய கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.