281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
கலைஞர் குறல் விளக்கம் – எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
282. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்
கலைஞர் குறல் விளக்கம் – பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.
283. களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்
கலைஞர் குறல் விளக்கம் – கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும்.
284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் – களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம். அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
கலைஞர் குறல் விளக்கம் – மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.
286. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
கலைஞர் குறல் விளக்கம் – ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.
287. களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்
கலைஞர் குறல் விளக்கம் – அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம் களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.
288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு
கலைஞர் குறல் விளக்கம் – நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும் கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
289.அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
கலைஞர் குறல் விளக்கம் – களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.
290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
கலைஞர் குறல் விளக்கம் – களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.