Homeசெய்திகள்அரசியல்ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க முடியாது - உச்சநீதிமன்றம்

ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

அரசியல் சாசன பிரிவு 200, 201 குறித்த அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க முடியாது எனவும் மசோதாவில் எதாவது பிரச்சனை என்றால் அதை ஆளுநர் வெளிப்படையாக கூற வேண்டும். இல்லை என்றால் ஆளுநரின் மூளைக்குள் என்ன இருக்கிறது என்பதை மாநில அரசு எப்படி தெரிந்து கொள்ள முடியும். உரிய விளக்கத்தை தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் ஆளுநர் தொடர்பான வழக்கை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க முடியாது - உச்சநீதிமன்றம்

ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,

நீதிபதிகள் ஏழுப்பிய கேள்வி – ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?. அவர் சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றால் எப்படி தெரியும்?. மேலும் சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்?. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என ஆளுநர் தரப்புக்கு அறுவுறுத்திய நீதிபதிகள் மசோதா மீது முடிவு எதுவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன நடவடிக்கை? என கேள்வி எழுப்பினர்.

ஆளுநர் தரப்பில் – தமிழக அரசு துணைவேந்தர் நியமனத்தில் கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்டத்துக்கு, விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவ்வாறு  சட்டங்களுக்கு எதிராக உள்ள மசோதாவிற்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி – பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். அதனை நீக்க வேண்டும். முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது.

ஆளுநர் தரப்பில் – பல்கலைக்கழகங்களின் செயல்பாடு குறித்து ஆளுநர் கடிதம் பெறுகிறார். துணைவேந்தரின் மாநாடு நடைபெற இருந்தது. தயவு செய்து கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. யுஜிசி விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதா மாநில அரசால் கொண்டுவரப்பட்டது. ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் எனறால் அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். குறிப்பாக மாநில அரசே, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று ஆளுநரை கேட்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. இதைவிடுத்து ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200ன் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாகும்.

நாடுமுழுவதும் மாநிலங்களுக்கும் – ஆளுநர்களுக்கும் இடையே முரண் மற்றும் ஆளுநர்களுக்கு எதிராக புகார்கள் உள்ளதாக கூறலாம். ஆனால் தனது கருத்தை வெளிப்படுத்தி, மசோதாவில் திருத்தம் செய்து, சரியான இரு தரப்புக்கும் சாதகமான பரிந்துரைகளை சேர்க்க விரும்புகிறார் என்றே கூற முடியும். அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு நான்கு அதிகாரங்கள் உள்ளது. assent, withholding, reserving and Repugnance. மசோதாவுக்கு ஒப்புதலை வழங்காமல் நிறுத்திவைக்கும் போது இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என எந்த நேரடி விதிகளும் அரசியலமைப்பில் இல்லை. ஆளுநரிடம் அல்லது குடியரசுத் தலைவரிடம் மசோதா நிலுவையில் இருக்கும்போது அது சட்டப்பேரவையில் காலாவதியாகாது. எனவே தான் முடிவெடுக்க ஆளுநருக்கு எந்தக் கால நிர்ணயம் அரசியல் சாசனத்தில் செய்யப்பட வில்லை.

நீதிபதிகளின் கேள்வி – கடந்த 2023ம் ஆண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர் தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?. இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?.

ஆளுநர் தரப்பில் – இல்லை மசோதாக்கள் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். ஆளுநர், அரசியல் சாசனம் 200ன் முதல் விதி மூலம் முடிவெடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும் மசோதாவை ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சட்டப்பிரிவு 200ன் எந்தப் பகுதியிலும் குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்புவது தடுக்கப்படவில்லை. மேலும், மேற்கூறிய விவகாரங்களில் நீதிமன்றத்தின் மூலம் மறுஆய்வு செய்வதற்காக வழிமுறை ,சாத்தியக்கூறுள் என்பது மிகவும் குறுகியது ஆகும். அதேபோல, அரசியல்சாசன பிரிவு 200ஐ அரசியல்சாசன பிரிவு 254 உடன் படித்தால், எந்த நிலையிலும் ஒரு மசோதாவை குடியரசு தலைவருக்கு முடிவெடுக்க அனுப்புவதற்கான வழிமுறை என்பது எப்போதும் உண்டு. அதை குறிப்பிட்ட நிலையில் தான் அனுப்ப முடியும் என்று இல்லை.

நீதிபதிகள் கேள்வி – குடியரசு தலைவர் மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா?.

ஆளுநர் தரப்பில் – ஒப்புதல் இல்லாமல் குடியரசு தலைவரிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை.

நீதிபதிகள் கேள்வி – அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா ? (Repugnance set at rest).

ஆளுநர் தரப்பில் – ஆளுநரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல. மாறாக அவை சட்ட திருத்தங்கள். அதனை குடியரசுத் தலைவர் முடிவுக்காக ஆளுநர் நிறுத்திவைக்கிறார்.

நீதிபதிகள் கேள்வி – உங்கள் வாதப்படி பல்கலைக்கழகங்களின் தரம், துணைவேந்தர்கள் குறித்து கவலை கொண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன?.

ஆளுநர் தரப்பில் – மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியபின் எதற்காக என்று அவர் காரணத்தை கட்டுரை எழுத தேவையில்லை. ஏனெனில் மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் என்றால், அது அவரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை என்பதுதான் அர்த்தம். அதை அவர் சிறிய குறிப்பாக குடியரசு தலைவர் முடிவுக்கு அனுப்புகிறேன் என கூறியுள்ளார். மேலும் அரசு சட்டத்தை நிறைவேற்றும்போது, அமைச்சரவையின் ஆலோசனை மூலமே கொண்டு வரும். அந்த சட்டத்தில் முரண் இருந்தால் , அந்த சட்டம் சரியானது அல்ல. அதனை சரி செய்யுங்கள் என தெரியப்படுத்துவது ஆளுநரின் கடமை ஆகும்.

நீதிபதிகள் கேள்வி – ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போது என்ன குறிப்பை தெரிவித்து அனுப்பினார் ?. ஏனெனில் இந்த மசோதா மீது முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை, குடியரசு தலைவரே ஆராய்ந்து முடிவெடுங்கள் என கூறினாரா? அல்லது எதன் அடிப்படையில் அனுப்பினார் என்பதை விளக்குங்கள்?. வெறுமனே குறிப்பு இல்லாமல் ஒரு மசோதாவை அனுப்பினார் என்றால் ஏன்?

ஆளுநர் தரப்பில் – குடியரசு தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவை இல்லை.

நீதிபதிகள் கேள்வி – குடியரசு தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பும் போது ,எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவை இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஆளுநர் ஏதாவது ஒரு காரணத்தை குடியரசு தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். நாட்டின் குடியரசு தலைவர் அவராகவே கேட்டு தெரிந்து கொள்வாரா?. ஒரு மசோதா சரியில்லை என்று கூறி முதல் நாளே குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க மறுக்க முடியுமா?. மேலும், குடியரசு எந்த காரணத்தையும் அவ்வாறு கூறாமல், நான் நிறுத்துகிறேன் என்று கூறுகிறார் என்றால் என்ன?.

ஆளுநர் தரப்பில் – ஒரு மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது என்பது, அது சரியானது அல்ல repugnance) என்பதையே குறிக்கிறது.

நீதிபதிகள் கேள்வி – அப்படியெனில் மசோதைவை நிராகரியுங்கள்.

ஆளுநர் தரப்பில் – மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்பு தான்.

நீதிபதிகள் கேள்வி – அரசியல் சாசன பிரிவு 200, 201 குறித்த அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுப்பு. அரசியல் சாசன பிரிவு 200ன் முதல் விதியை புரிந்து கொள்ளாமல் நிராகரித்தால், வழக்கில் விசாரிப்பதற்கே ஒன்றும் இல்லை. இதோடு அனைத்தும் முடிந்தது என்றே அர்த்தம். எனவே உரிய விளக்கத்தை தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் ஆளுநர் தொடர்பான வழக்கை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி

MUST READ