சந்தை விலை விட பாதிக்கு பாதி விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி நூதன மோசடி.
கஸ்டம்ஸில் பிடிப்பட்ட தங்க நகைகள் ஏலத்திற்கு வருவதாகவும் தனக்கு தெரிந்த நபர் கஸ்டமஸ் அதிகாரியாக இருப்பதாக கூறி ஆரல்வாய்மொழி அருகே குருக்கல் மடத்தை சேர்ந்த ராஜூ என்பவரை கன்னியாகுமரி வரவழைத்து ரூபாய் 1,80,000 ரூபாயை வாங்கி கொண்டு நூதன முறையில் மோசடி செய்து தலைமறைவான தக்கலை பகுதியை சேர்ந்த பிராங்கிளின் ஆவார். பாதிக்கப்பட்டவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே குருக்கல் மடத்தை சேர்ந்தவர் ராஜூ. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் தக்கலை சேர்ந்த டாரஸ் லாரி ஓட்டுநர் பிராங்கிளின் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்துள்ளார்கள். இதனால் ஆட்டோ ஓட்டுநர் ராஜூ தனது குடும்ப வறுமை குறித்து பிராங்கினிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தனக்கு கஸ்டம்ஸ் துறையில் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் அங்கு சட்டவிரோதமாக பிடிப்படும் தங்கம் ஏலம் விடப்படும் அதைப்போல் தற்பொழுதும் தங்கம் ஏலம் விட இருப்பதாகவும் அந்த தங்கத்தை கஸ்டம்ஸ் அதிகாரி உதவியுடம் சந்தை விலையை விட பாதிக்கு பாதி விலைக்கு வாங்கி தருவதாக ராஜூவிடம் பிராங்கிளின் தெரிவித்ததோடு உனக்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தந்தால் தங்கம் வாங்கி தருவதோடு உனக்கும் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனை நம்பிய ராஜூ தனது நண்பர்களான சுதன் மற்றும் பூபதி ஆகியோரிடம் இருந்து 1,80,000 ரூபாயை வாங்கி கன்னியாகுமரி பேரூந்து நிலையம் அருகே வைத்து கொடுத்துள்ளார். பின்னர் பிராங்கிளிடம் தங்கம் கேட்டதற்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து இருப்பதாகவும் நீங்கள் உடன் வந்தால் தங்கத்தை வாங்க முடியாது என்றும் எனவே உங்கள் இருசக்கர வாகனத்தை கொடுங்கள் நான் சென்று தங்கதை வாங்கி வருகிறேன் என கூறியதோடு இருசக்கர வாகனத்தையும் வாங்கி கொண்டு பிராங்கிளின் சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் தங்கத்துடன் பிராங்கிளின் வராததால் சந்தேகம் அடைந்த ராஜூ மற்றும் அவர் நண்பர்கள் அவரை அலைப்பேசியில் அழைத்த பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருசக்கர வாகனம் நிற்பதாகவும் அதனை சென்று எடுத்து கொண்டு அங்கேயே நின்று கொள்ளுங்கள், சற்று நேரத்தில் தங்கத்துடன் வருகிறேன் என பிராங்கிளின் தெரிவித்துள்ளார். பிராங்கிளின் தெரிவித்த இடத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தை எடுத்த ராஜூ மீண்டும் நீண்ட நேரமாக நின்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிராங்கிளின் வராததால் மீண்டும் அலைப்பேசியில் தொடர்பு கொண்ட பொழுது அலைப்பேசி அணைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தான் பிராங்கினால் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதை ராஜூ அறிந்தார்.
இதனை அடுத்து இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் என்ற ஆசைக்காக தனது நண்பர்களிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து நூதன முறையில் ஏமாற்றப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களை ஏமாற்றி விட்டு தலைமறைவான பிராங்கினை கண்டு பிடித்து பணத்தை மீட்டு தருமாறும் இதைப்போல் பலரை அவர் ஏமாற்றி இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ராஜூ தெரிவித்துள்ளார்.