நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவர் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டியும் சாதனை படைத்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் குபேரா எனும் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்தது தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இதற்கிடையில் இவர் பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய அடுத்தடுத்த படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படமானது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என படக் குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர்த தனுஷ் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார் என்று அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் தொடர்பான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தனுஷ் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்தது தனுஷ் இயக்கும் 5வது படமான இந்த படத்தில் நடிகர் தனுஷே ஹீரோவாக நடிக்க போகிறாரா? அல்லது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை போல் மற்ற நடிகர்களை வைத்து இயக்கப் போகிறாரா? என்பது குறித்து அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.