Homeதிருக்குறள்39 – இறைமாட்சி - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

39 – இறைமாட்சி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

39 – இறைமாட்சி - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
        உடையான் அரசரு ளேறு

கலைஞர் குறல் விளக்கம்  – ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
        எஞ்சாமை வேந்தற் கியல்பு

கலைஞர் குறல் விளக்கம்  – துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.

383. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
        நீங்கா நிலனாள் பவற்கு

கலைஞர் குறல் விளக்கம்  – காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும் துணிவும் நாடாளுகின்ற வர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
        மான முடைய தரசு

கலைஞர் குறல் விளக்கம்  – அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும். வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
        வகுத்தலும் வல்ல தரசு

கலைஞர் குறல் விளக்கம்  – முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

386. காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
        மீக்கூறும் மன்னன் நிலம்

கலைஞர் குறல் விளக்கம்  – காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
        தான்கண் டனைத்திவ் வுலகு

கலைஞர் குறல் விளக்கம்  – வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
        கிறையென்று வைக்கப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான்.

389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
         கவிகைக்கீழ்த் தங்கு முலகு

கலைஞர் குறல் விளக்கம்  – காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

390. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
        உடையானாம் வேந்தர்க் கொளி

கலைஞர் குறல் விளக்கம்  – நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலை யுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

MUST READ