”அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், ‘நான் அ.தி.மு.க.வில் சேருவதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை… நிபந்தனையின்றி இணைய விரும்புகிறேன்’ என ஊடகங்களிடம் பேசினார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்நிலையில் இன்று, “அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை. எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை. டாக்டர் வெங்கடேசன் சோபாவில் அமர்ந்திருக்கும் போது, உதயகுமார் எப்படி எந்த நிலையில் இருந்தார் என்பதையெல்லாம் நான் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் சொன்னால்..? அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; அதிமுக ஒன்று சேராமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்றுதான் கூறினேன். எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி” என ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஓ.பி.எஸ். நீதிமன்றம் செல்லாமல் இருந்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடியிடம் பேசுவேன் என்று ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். ஆர்.பி.உதயகுமார் என்னை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
திடீர் திடீரென்று பல்டியடிக்கும் பன்னீர் செல்வத்தை எப்படி அ.தி.மு.க.வில் சேர்ப்பது? எடப்பாடி பழனிசாமி ஏன் ஓ.பி.எஸஸை அதிமுகவில் சேர்க்காமல் இருக்கிறார் என்பது இப்போது புரிகிறதா என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்!