Homeதிருக்குறள்41 -  கல்லாமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

41 –  கல்லாமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

41 -  கல்லாமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
        நூலின்றிக் கோட்டி கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

402. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
        இல்லாதாள் பெண்காமுற் றற்று

கலைஞர் குறல் விளக்கம்  – கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
       சொல்லா திருக்கப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம்  – கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

404. கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
       கொள்ளார் அறிவுடை யார்

கலைஞர் குறல் விளக்கம்  – கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
        சொல்லாடச் சோர்வு படும்

கலைஞர் குறல் விளக்கம்  – கல்வி யறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம். கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்

406. உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
        களரனையர் கல்லா தவர்

கலைஞர் குறல் விளக்கம்  – கல்லாதவர்களைக் களர் நலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

407. நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
        மண்மாண் புனைபாவை யற்று

கலைஞர் குறல் விளக்கம்  – அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
       கல்லார்கண் பட்ட திரு

கலைஞர் குறல் விளக்கம்  – முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

409. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
        கற்றா ரனைத்திலர் பாடு

கலைஞர் குறல் விளக்கம்  – கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

410. விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
        கற்றாரோ டேனை யவர்

கலைஞர் குறல் விளக்கம்  – மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ. அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

MUST READ