”விடுபட்ட தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம், வில்லிபத்திரியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களைத் தான் அதிகம் நம்புகிறார். பெண்களுக்குத் தான் கட்டணம் இல்லாத பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களிடம் கொஞ்சம் பணம் மிஞ்சினாலும் அது வீட்டிற்கு செல்லும். ஆனால் ஆண்களிடம் பணம் மிஞ்சினால் அது டீ கடைக்கும் வடை கடைக்கும் தான் செல்லும்.
ஆயிரம் ரூபாயும் மகளிர் உரிமை தொகையாக மகளிருக்குத்தான் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை ஒரு சிலருக்கு வராமல் உள்ளது. விடுபட்ட தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆண்களை விட அதிகமாக வேலை செய்பவர்கள் பெண்கள் தான். நீங்கள் வேலை செல்வதை அங்கீகாரம் செய்து உங்கள் சகோதரனாக மகளிர் உரிமை தொகை வழங்குகிறோம்” என பேசினார்.
இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த உரிமை தொகை உயர்த்தப்படுமா என்ற கேள்வி உள்ளது. கர்நாடகாவில் ரூ.1500 வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதே தொகை வழங்கப்படுகிறது. பஞ்சாப்பில் 1200 ரூபாய் பலருக்கு வழங்கப்படுகிறது.
டெல்லியில் பாஜக 2500 ரூபாய் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் ரூ.1000 மட்டுமே வழங்கப்படுவதால்.. இதை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும். புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.