471. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
கலைஞர் குறல் விளக்கம் – செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.
472. ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
கலைஞர் குறல் விளக்கம் – ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
473. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
கலைஞர் குறல் விளக்கம் – தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
474. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
கலைஞர் குறல் விளக்கம் – மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
475. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
கலைஞர் குறல் விளக்கம் – மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்
476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
கலைஞர் குறல் விளக்கம் – தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
477. ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
கலைஞர் குறல் விளக்கம் – வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.
478. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை
கலைஞர் குறல் விளக்கம் – எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
கலைஞர் குறல் விளக்கம் – இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பது போல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.
480. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
கலைஞர் குறல் விளக்கம் – தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.