”அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வு ஊதிய திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்” ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 04.03.25 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை சேம நிதியிலிருந்து முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளார்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ள வர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இன்று மட்டும் ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு, இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப் படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றி வருகிறார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு வருடமாக பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றப்படாமல் உள்ளது. தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும், ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வுதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.