சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து பயணிகளின் வசதிக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை – கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, நாளை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை கடற்கரை – எழும்பூர் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளின் நலன் கருதி தாம்பரம், கிளாம்பாக்கம், பல்லாவரத்திலிருந்து கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு கூடுதலாக 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.