லண்டனில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு, விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இசைஞானி இளையராஜா, Valiant என பெயரிட்ட தனது முதல் சிம்பொனியை லண்டனில் நேற்று அரங்கேற்றம் செய்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை உலகின் சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினர் இசைத்தனர். சிம்பொனியை அரங்கேற்றியதன் மூலம் ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்தார். மேலும் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி போன்ற சிம்பொனி இசை ஜாம்பவான்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.
சிம்பொனி அரங்கேற்றத்திற்கு பின்னர் இசைஞானி இளையராஜா இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வரவேற்றார். இதோபோல் பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, தனக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தனது சிம்பொனி நிகழ்ச்சியால் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்றது நெகிழ்ச்சி அளிப்பதாக கூறிய இளைஞராஜா, 13 நாடுகளில் தனது சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் இது ஆரம்பம்தான் என்றும், இந்த இசை உலகம் எங்கும் கொண்டுச் செல்லப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.