தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனுஷின் 52 ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ராயன் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், இட்லி கடை திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்க கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தேனி பகுதியில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் எனவும் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் வெளியீடாக இட்லி கடை திரைப்படம் இருக்கும். இதன் முழு படப்பிடிப்பும் முடிந்தது. தனுஷ் சாரின் பணி ஆச்சரியமாக இருந்தது. தேனியில் படப்பிடிப்பு முடிந்தது. அவர் இரவும் பகலும் படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்துவிட்டார். கடைசி நாள் படப்பிடிப்பை முடித்த பின்னர் அவர் இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லிக்கு சென்றார்” என்று தெரிவித்துள்ளார்.