591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
கலைஞர் குறல் விளக்கம் – ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
592. உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
கலைஞர் குறல் விளக்கம் – ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
593. ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
கலைஞர் குறல் விளக்கம் – ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
கலைஞர் குறல் விளக்கம் – உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
கலைஞர் குறல் விளக்கம் – தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டினஅளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
கலைஞர் குறல் விளக்கம் – நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது
597. சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
கலைஞர் குறல் விளக்கம் – உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல. ஊக்கமுடையவர்கள். அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
கலைஞர் குறல் விளக்கம் – அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.
599. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
கலைஞர் குறல் விளக்கம் – உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
600. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
கலைஞர் குறல் விளக்கம் – மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.