கோல்ட் கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலக அளவில் தலைசிறந்த பளுதூக்குதல் வீரர்களில் ஒருவரான, சகோதரர் சதீஷ் சிவலிங்கம் , மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியால் கவரப்பட்டு, தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
தேசியச் சிந்தனை மிக்க இளைஞரான சகோதரர் சதீஷ் சிவலிங்கம் அவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்காக பங்கேற்றவர். காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் என, ஆறு தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர். அர்ஜுனா விருது வென்றவர். பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்.
சகோதரர் திரு சதீஷ் சிவலிங்கம் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில், தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
யார் இந்த சதீஷ் சிவலிங்கம்..? கோல்ட் கோஸ்டில் நடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றவர்.
சதீஷ் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் இதே எடைப் பிரிவில் 149 கிலோ ஸ்னாட்ச் மற்றும் 179 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் எடைப் பிரிவில் மொத்தம் 328 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றிருந்தார். ஸ்னாட்ச் பிரிவில் அவர் 149 கிலோ எடையைத் தூக்கியதே விளையாட்டு சாதனையாகத் தொடர்கிறது. கோல்ட் கோஸ்டில், அவர் மொத்தம் 317 கிலோ (144 கிலோ + 173 கிலோ) எடையைத் தூக்கி இருந்தார்.