பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி ஆகியோருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு நாட்டைவிட்டு தப்பிச்சென்ற மெகுல் சோக்சி ஐரோப்பாவில் ஒளிந்திருப்பது சில மாதங்களுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்திய விசாரணை அமைப்புகள் அவரை கைது செய்ய பெல்ஜியம் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று பெல்ஜியம் போலீசார் சோக்சியை கைது செய்துள்ளனர். புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில் மெகுல் சோக்சியின் உடல் நிலையை காரணம் காட்டி அவரை நாடு கடத்தக்கூடாது என்று அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.