ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நீதிமன்ற உத்தரவை மீறி ‘பிளாட்’ போட்டு விற்பனை செய்வதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தீவிரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 116 ஏக்கர் பரப்பளவில், 1993ல் உருவாக்கப்பட்டது. இதில், இரண்டு செக்டரில் சேர்த்து 4, 000 குடியிருப்புகள் உள்ளன. அதில், பேருந்து நிலையத்திற்காக 1. 54 ஏக்கர் நிலம், நுாலகத்துக்காக 3, 625 சதுர அடி, மருத்துவமனைக்காக 4, 368 சதுர அடி, தபால் நிலையத்துக்கு 3, 675 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கூடம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப பள்ளி, நர்சரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 30 சென்ட் நிலத்தில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டி, பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது.
இந்நிலையில், காந்தி சிலை அருகே 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிளை நுாலகம், 1993ம் ஆண்டு முதல், ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள பாழடைந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மனைப்பிரிவில், விளையாட்டு திடல், மகளிர் மேம்பாட்டிற்கான இடம், நியாய விலைக்கடை, பூங்கா உள்ளிட்டவை, மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கவில்லை.
கடந்த ஆண்டு வரை பேருந்து நிலையம், நுாலகம், தபால் நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் அந்தந்த துறையிடம் ஒப்படைக்கவில்லை. இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட போது, சம்பந்தப்பட்ட துறையினர் பணம் செலுத்தி இடத்தை வாங்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேற்படி இடங்கள், முதல்கட்டமாக 6, 920 சதுர மீட்டர் இடத்தில், 43 மனைகளும் இரண்டு கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படும் இடங்களை தனியாருக்கு கொடுத்து விடாமல், அரசு பாதுகாக்க வேண்டும். தனியாருக்கு ஒதுக்குவது லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும்’ என கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள், மக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை விற்பனை செய்வதில் தமிழக வீட்டு வசதி வாரியம் தீவிரம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.