காங்கிரஸ் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து ஏற்பட்டதால் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது.
பெங்களூர் நகரில் இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அக்கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக கோலார் மாவட்டம் முல்பாகல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட சென்றார். ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் சுமார் 40 கிலோமீட்டர் பறந்து ஹொஸ்கோட்டே என்ற பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஹெலிகாப்டர் முன்பு இருந்த கண்ணாடி உடைந்தது. இதனால் விமானி உடனடியாக ஹெலிகாப்டரை பின்னால் திருப்பி அருகில் இருந்த எச். ஏ. எல் விமான நிலையத்தில் தரையிறக்கினார். விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக டி கே சிவகுமார் சாலை மார்க்கமாக கோலார் விரைந்தார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.