அதிமுக ஆட்சியில் போதை பொருட்கள் கொடிக்கட்டி பறக்கவில்லையா? பொன்முடி
கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது, கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளசாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் குட்கா, போதை பொருட்கள் கொடிக்கட்டி பறந்தது. இது தொடர்பாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு உள்ளது. இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாதா? எந்த குற்றமும் நடக்கவில்லையா? தற்போது திமுக ஆட்சியில் போதை பொருட்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக காவல்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினார். மேலும் போதை பொருட்களை கட்டுப்படுத்த தனிபிரிவு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி இருந்தும் ஒரு சில தவறுகள் நடக்கிறது. அதனால் தான் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்பு உடைய மற்ற 4 நபர்கள் விரைவில் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடந்து உள்ள எதிர்பாராத சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறை அதிகாரிகள், பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.