லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
லைகா சினிமா நிறுவனம் தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும் இவர் தமிழ்நாட்டில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சமீபகாலமாக மிகப்பெரிய பொருட்செலவிலான படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 படங்கள் ஆகியவை கூட லைக்கா நிறுவன தயாரிப்புகள்தான்.
இந்த நிலையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தி. நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்திவருகின்றனர். சோதனை முடிவிலேயே சட்டவிரோத பண பரிமாற்றம் எவ்வளவு நடந்திருக்கிறது என்ற விவரம் தெரிய வரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.