ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணம்!
ஒடிசா ரயில் விபத்துக்கு தானியங்கி கவாச் கருவி இந்த வழித்தடத்தில் பொருத்தாததே காரணம் என்கிற செய்தி முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும், நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் KAVACH தொழிநுட்ப அமைப்பு பொருத்தப்படாததால் விபத்து நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. KAVACH தொழில்நுட்பம் இருந்திருந்தால், ஒடிசா ரயில் விபத்து தவிர்க்கப்படிருக்கும் என்று கூறப்படுகிறது. KAVACH ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்தால் மோதாமல் தடுக்கும். 2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.. இந்த விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இதனிடையே ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.