மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுக்கு விமானி இல்லாமல் கூட செல்வார், ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார். ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு திமுக அரசை அச்சுறுத்த நினைக்கிறது. எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தான் ஒன்றிய அரசு திமுகவை எதிர்க்கிறது. திமுகவில் சாதாரண கிளைச்செயலாளரை கூட பாஜக அரசு ஒன்றும் செய்ய முடியாது.
நமது முதலமைச்சர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார். தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதனை கண்டு பாஜக அஞ்சுகிறது.என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கலைஞர் வைத்த பெயர் உதயநிதி, அப்படி அழைத்தாலே போதும். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்டவை பார்க்கும்போது சின்னவன்தான்.” என்றார்.