அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சமர்பித்த அதிமுக அவரவு, செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றது.
2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் அனுப்பிய ஆவணங்களை 03.10.2022 அன்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதிமுக ஏற்கெனவே ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அதிமுகவில் தங்களது பலத்தை நிரூபிக்க இரு தலைமையும் போட்டிப்போட்டு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அரங்கேற்றிவருகின்றன. அதிமுகவில் பொதுக் குழு உறுப்பினர்களால் தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் தனக்கே அதிகாரம் என எடப்பாடி பழனிசாமி கூறுகின்றார். ஆனால் பன்னீர்செல்வம் அதிமுக விதிகளின்படி பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், பொதுக் குழு உறுப்பினர்களுக்கு இதில் வேலை இல்லை எனக் கூறி வருகிறார்.