தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில், மாநிலத்தின் துணை முதலமைச்சராக இரண்டாவது முறையாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தனக்கு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அஜித்பவார், பிரபுல் படேல் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கட்சித் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை சபாநாயகருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை
இந்த சூழலில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 13 சட்டமன்ற உறுப்பினர்களும், 3 சட்டமேலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 53 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், மிக குறைவான எண்ணிக்கையிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதால் சரத்பவார் மற்றும் சுப்ரியா சூலே எம்.பி. அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பங்கு உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனவோ, அவர்களுக்கே கட்சி மற்றும் சின்னம் சொந்தம். ஏற்கனவே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை உடைத்து, முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, கட்சியையும், சின்னத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார். பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் பக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.