மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் களமிறங்க நேரிடும் – உச்சநீதிமன்றம்
மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக வெளியான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வழக்கறிஞரிடம் வேதனை தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய அரசுக்கும், மணிப்பூர் அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மணிப்பூரில் நடந்திருக்கும் கொடூர சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் பெண்களை கருவிகளாக்கி, பாலின வன்முறையை ஏவுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது மோசமான மனித உரிமை மீறல், இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசு இதில் தலையிட்டு நிஜமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது. நாங்கள் அரசுக்கு சிறுது அவகாசம் கொடுக்கிறோம். சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாங்கள் களத்தில் இறங்க நேரிடும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.