மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவு முகாமை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி. தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு திட்டமும் இதே தருமபுரியில்தான் தொடங்கப்பட்டது. மகளிர் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் தொடங்கி வைத்த திட்டத்தால் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது.
கோட்டைக்கு சென்ற நான் இட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை. தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல தலைமுறைகளை கடந்தும் பயனளிக்கும். மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை. தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடு வாழவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். ஆட்சி பொறுப்பேற்றபோது நிதிநிலை சரியில்லாததால் உடனே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. காலையில் பசியோடு வரும் பிள்ளைகள் எப்படி கல்வி கற்க முடியும் என்பதை மனதில் கொண்டு தொடங்கப்பட்டதே காலை உணவுத் திட்டம்.
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம். அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது” என்றார்.