பொதுமக்கள் போரில் பங்கேற்க தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்
தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கார்கில் வெற்றி தினத்தின் இருபத்தி நான்காவது ஆண்டு விழா. 1999-ம் ஆண்டு இதே நாளில், நமது துணிச்சலான வீரர்கள் தங்கள் அசைக்க முடியாத தைரியத்துடனும் உறுதியுடனும் கார்கிலில் நமது எல்லையிலிருந்து ஊடுருவியவர்களை விரட்டியடித்தனர்.
இதனைமுன்னிட்டு டிராஸில் மரியாதை செலுத்திய பின்னர் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும். நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம் இராணுவத்திற்கு உதவ பொதுமக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு ராணுவ வீரனும் எப்படி இந்தியனாக இருக்கிறாரோ, அதேபோல் ஒவ்வொரு இந்தியனும் ராணுவ வீரராக இருக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பாகிஸ்தான் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்.
எதிர்க்கட்சிகள் தங்களின் கடந்த கால தவறுகளை மறைக்கும் முயற்சியில் கூட்டணி பெயரை மாற்றியுள்ளன. I.N.D.I.A என பெயரை மாற்றுவதால் அவர்களின் கடந்த கால செயல்கள் அழிந்துவிடாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள்” என்றார்.