மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தூத்துக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிவர் கொடிவேல். இவர் புளியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை இவர் வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர் கொடிவேல் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொடிவேல் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிவேல் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அடிக்கடி மது போதையில் வருவதாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதற்கு முந்திய நாள் மது போதையில் வந்தவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். மது அருந்தி வருவதை கண்டித்ததால் மனம் உடைந்து சுடிதார் சாலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.