மூதாட்டியிடம் 5 சவரன் தங்க தாலி பறிப்பு – குற்றவாளி இரண்டு மணி நேரத்தில் கைது
சென்னை பாடியில் வீட்டிலிருந்த 70 வயது மூதாட்டியிடம் தண்ணீர் கேன் போட வந்தவர் போல பாவனை செய்து 5 சவரன் தங்க தாலி செயின் பறித்து தப்பி ஓடிய குற்றவாளியை இரண்டு மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாடி டிவிஎஸ் அவன்யு 37 வது தெருவில் வசித்து வருபவர் கோமதி (70) இவர் 40 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து வருவதாகவும். இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தண்ணீர் கேன் போடுவது போல மூதாட்டியை அழைத்து அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
மூதாட்டி சத்தம் போடவே அருகில் வசிப்பவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நொளம்பூர் காவல் துறையினர் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி,தனிப்படை போலீசாரை அமைத்து குற்றவாளியை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து உள்ளனர்.
சென்னை மாநகர கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பொறுப்பேற்றதற்கு பிறகு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைக்கவும் அதே சமயத்தில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி வந்த நிலையில்,திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில், ஆய்வாளர் மில்லர்,உதவி ஆய்வாளர் ரமேஷ், காவலர் அக்னிராஜ் உள்ளிட்ட காவலர்கள் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தியதில்,ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரகாஷ் (எ) லோலாய் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.
இவர் கடைசியாக சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.