கேப்டன், கருப்பு எம்ஜிஆர், புரட்சிக் கலைஞர் என தமிழ் மக்களால் கொண்டாடப்படும் விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் இழப்பு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் இன்று வரையிலும் மீளா துயரத்தில் இருந்து மீள முடியாமல் தமிழ் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்துக்காக நினைவேந்தல் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, விஜயகாந்தை நினைத்து கண் கலங்கியபடி விஜயகாந்த் உடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது “விஜி மா.. இவ்வளவு சீக்கிரமா போவான்னு நினைக்கல. சினிமா தான் அவனுக்கு முதல் குடும்பம். ஒரு நல்ல மனிதனாக அவனுக்கு ஈடு இணை வேறு யாருமே கிடையாது” என்று விஜயகாந்தைப் பற்றி பேசினார் நடிகர் ராதாரவி. சினிமாவில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக தான் இருந்தார்கள். நண்பர்கள் வட்டாரத்தில் கேப்டன் விஜயகாந்தை “விஜி” என செல்லமாக அழைப்பர் என்பது
குறிப்பிடத்தக்கது.