கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து சரண்யா மோகன், கிஷோர், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அது மட்டும் இல்லாமல் நடிகர் சூரி இந்த படத்தின் மூலம் தான் பரோட்டா சூரி என பிரபலமானார். கிராமத்து பின்னணியில் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் வெண்ணிலா கபடி குழு படமும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாமானிய மக்களும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில், “வெண்ணிலா கபடி குழு முதல் லால் சலாம் வரை எனது நம்ப முடியாத பயணம். பார்வையாளர்களிடமிருந்து நான் பெற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. மேலும் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு” என்று விஷ்ணு விஷாலும் சுசீந்திரனும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
An incredible journey from #VennilaKabaddiKuzhu to #LalSalaam, grateful for all the love and support I’ve recieved from the audiences ❤️
This year is extra special. A note from the heart, here. pic.twitter.com/rdDl5jpM6H
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) January 29, 2024
அதில் “எனது 15 வருடத் திரை பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சித்து வருகிறேன். இதுவரை நான் நடித்த 20 படங்களில் பாதி படங்களுக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் வாழும் என்பதே எனக்கு பெருமை. என் திரை பயணத்தில் இந்த 15வது ஆண்டு எனக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது. லால் சலாம் என்ற அற்புதமான படத்தின் மூலம் மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் திரையை பகிர்ந்து கொள்கிறேன். எனது திரை பயணம் சரியான திசையிலும் சரியான தருணத்திலும் உயர்ந்து செல்வது எனக்கு மகிழ்ச்சி. இதுவரை என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி. என் வாழ்வில் இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளிலும் எனக்கு ஆதரவாக இருந்த என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. அடுத்ததாக வெளி வரவிருக்கும் சுவாரசியமான படைப்புகளிலும் நான் இணைந்து இருக்கிறேன் என்பது எனக்கு உற்சாகத்தை தருகிறது. இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை உங்களை சோதிக்கும், உங்களின் திறமைக்கு பல சவால்களை தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன் உங்கள் பணியில் கவனமாகவும் வலுவாகவும் நின்றால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.