கமர்சியல் சினிமாக்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் பல பக்தி படங்களும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தன. கணக்கில் அடங்காத பக்தி படங்கள் வெளிவந்த போதும் அனைத்து படமும் பெண்களின் பேராதரவோடு நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைக்கும் அளவுக்கு பக்தி படங்களுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. அந்த வகையில் சீதா நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடி வெள்ளி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமி என்னும் கதாபாத்திரத்தில் யானை ஒன்றும் நடித்திருந்தது. வழக்கம்போல நல்லவன் போல வேடமிட்டு அப்பாவி பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வில்லன், திருமணத்திற்கு பின் அப்பாவி பெண்ணை கொடுமைப்படுத்த, அம்மன் பக்தையான பெண்ணுக்கு உதவ அம்மனே மனித அவதாரம் எடுத்து வந்து தீய சக்தியை அளிப்பது தான் பெரும்பாலான பக்தி படங்களின் கதையாக இருக்கும். இந்த படமும் அதே பார்மெட் தான். இருப்பினும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேராதரவை பெற்றதால் வெள்ளித்திரையில் விழாக்கோலத்தோடு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது ஆடி வெள்ளி.
இந்நிலையில் 35 வருடங்களுக்குப் பின்னர் இப்படத்தின் ரீமேக் உருவாக உள்ளது. இதனை ஆடி வெள்ளி படத்தை இயக்கியிருந்த ராமநாரயணனின் மகன் முரளி ராமசாமி தயாரிக்க உள்ளார். இதில் அம்மனின் பக்தையாக நடித்திருந்த சீதாவின் கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. மூக்குத்தி அம்மன் திரைப்படம் இந்த கால இளைஞர்களுக்கு ஏற்றார் போல காமெடி கலந்த படமாக அமைந்தது. தற்போது இந்த ஆடி வெள்ளி ரீமேக் திரைப்படம் இளைஞர்களையும் கவருமா அல்லது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -