இந்தியாவை இரண்டு பேர் விற்பனை செய்கிறார்கள், இரண்டு பேர் வாங்குகிறார்கள் – இவ்வளவுதான் இந்தியா… யார் விற்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? என்று நாட்டு மக்களக்கு தெரியும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு செய்த சாதனைகள் குறித்து வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன் மீது நடந்த விவாதத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் பேசிய காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் பேசியதாவது தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மையைப் பற்றி, வறுமையைப் பற்றி பேசினால், நீங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைபற்றி பேசுகிறீர்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் பண வீக்கத்தைப் பற்றி பேசினால் நீங்கள் பாபரைப் பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் கார்பரேட்டுகள் பற்றி பேசினால் நீங்கள் கஜினி முகம்மதுவைப் பற்றி பேசுகிறீர்கள். கடந்த காலத்தை கழித்துவிட்டால் உங்களிடம் எதிர்காலத்தை சந்திக்கிற எந்த ஒரு கருவியும் உங்களிடம் இல்லை.
2024 இந்தியாவின் வளர்ச்சி. உலக வளர்ச்சியைப் பற்றி பேச சொன்னால், தேர்தல் யுத்தத்தை துவங்கும் பொழுதே 10 ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டு இருப்பது பாஜக அரசின் தோல்வியின் இன்னொரு அடையாளம்.
இந்த வெள்ளை அறிக்கை என்ன சொல்கிறது?
புள்ளி விவரங்களின் வளர்ச்சியைப் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டும். 2014வது ஆண்டில் இந்தியாவில் 70 புள்ளியினர்கள் இருந்தார்கள், இப்போது 170 புள்ளியினர்கள் இருக்கிறார்கள். தனிநபர் சராசரி வருமானம் உலகத்தில் 142வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மனிதவள குறியீட்டில் 132வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மகிழ்ச்சி குறியீட்டில் 136வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்பரேட் மகிழ்ச்சியில் திளைக்கிற நாட்டில் மக்களின் மகிழ்ச்சி கடலில் தான் மூச்சு முழுக கிடக்கிறது. எனவே தான் இந்தியா உலக மகிழ்ச்சி குறியீட்டில் 136வது இடத்தில் இருக்கிறது.
சர்வதேச உணவு கொள்கை கழகத்தின் பட்டினி குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது. இந்த புள்ளி விவரத்தினை எல்லாம் எதிர்கட்சிகள் சொன்னால் இந்த புள்ளி விவரத்தினை நாங்கள் ஏற்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். நீங்களே பரிட்சை எழுதிக் கொள்வீர்கள், நீங்களே மதிப்பெண் போட்டுக் கொள்வீர்கள், நீங்களே அதற்கு மதிப்பீளுட்டுக் கொள்வீர்கள், கேட்டால் மதிப்பெண் விஷயத்தில் தலையிட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என்று புதிய சட்டத்தை கொண்டு வருவீர்கள்.
பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசியுள்ளீர்கள் கிராஸ் நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையில் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வரைபடத்தை ஏன் தவறவீட்டீர்கள்? சமையல் கேஸ் விலை உயர்வு வரை படத்தை வெளியிட தயாரா? பத்து ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்து இருக்கிறது. டீசல் மீதான வரிகள் 9.5 மடங்கு உயர்ந்து இருக்கிறது. இதற்கு யார் காரணம்? யமுனை நதிக்கரையில் சாந்தி வனத்தில் உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் அனைத்திற்கும் காரணமா? கொஞ்சம் யோசித்து பாருங்கள். கார்பரேட்டுகளின் வரி 2014வது ஆண்டு 33 சதவீதம் இருந்தது. உங்கள் ஆட்சியில் கார்பரேட்களின் வரி 22 சதவீதம் மட்டுமே. 11 சதவீத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு குறைத்து இருக்கிறீர்கள். ஒரு சதவீதம் 50 ஆயிரம் கோடி. 11 சதவீதம் என்றால் எத்தனை ஆயிரம் கோடி என்று நிதியமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா? மக்களுக்கு கொடுத்தால் அது சலுகை, மக்களுக்கு கொடுத்தால் அது இலவசம். கார்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத்தொகை. உங்களது அகராதியை நாடு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டு இருக்கிறது. இவற்றின் உச்சம் என்ன தெரியுமா? அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நாங்கள் அடித்தளம் இடுகிறோம் என்று மாண்புமிகு பிரதமர் சொல்கிறார். ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத ஒன்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
இந்தியாவில் இறைவனை வழிபடுகின்ற ஒவ்வொரு இந்தியனும் சூடம் கொளுத்தி வழிபடுவது இந்திய மரபுகளில் ஒன்று. ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இறைவனை வழிபடுகின்ற சூடத்திற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டியை போட்ட வரலாற்றின் முதல் நபராக நீங்கள் இருக்கிறீர்கள். யோசித்து பாருங்கள் இறைவனை வழிபடுகின்ற சூடத்தை ஏற்றுகின்ற ஒவ்வொரு இந்தியனும் இந்த அநீதியை வரிவிதிப்புக்கு எதிராக இந்த அநீதியான அரசுக்கு எதிராக ஆண்டவன் பிரார்த்திப்பான் என்பது உண்மை.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சூடம் பக்தி பொருள் தமிழ்நாட்டில் அதற்கு வரி விளக்கு அளிக்கிறேன் என்று சொல்லி வரி விளக்கு அளித்தார்கள். ஆத்திகனோ, நாத்திகனோ என்பது அல்ல அடுத்த மனிதன் மீதான நம்பிக்கைக்கு எவ்வளவு மதிப்பு அளிக்கிறோம் என்பதுதான் ஒரு அரசின் இலக்கணமாக இருக்கிறது.
அதேபோல திட்டங்கள், 1975வது ஆண்டில் துவங்கி 2013 வரை ஒன்றிய அரசு அமுல்படுத்திக் கொண்டிருந்து 15 திட்டங்களின் பெயர்களை நீங்கள் இந்தியில் மாற்றினீர்கள். இந்த 10 ஆண்டுகள் நீங்கள் கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் இந்தியில் மட்டுமே பெயர் வைத்தீர்கள். திட்டங்களுக்கு மட்டுமல்ல சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் வைத்திருக்கிறீர்கள்.
இவற்றின் உச்சபட்சம் என்னதெரியுமா? பணமதிப்பிழப்பின் போது பணமதிப்பிழப்பால் நீங்கள் புதிதாக கொண்டு வந்த 500 ரூபாய் தாள்கள், 2000 ரூபாய் தாள்களில் வரலாற்றில் இல்லாதபடி எண்களை ஹிந்தியில் பொருத்தியிருக்கிறீர்கள். இந்த அரசுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம் 2000 ரூபாய் தாள்களையும். 500 ரூபாய் தாள்களை பயன்படுத்தும் ஒவ்வொரு இந்தியனும் இந்தி திணிக்கிற இந்த ஆட்சியினுடைய அநியாயத்தை நினைத்துப் பார்ப்பான் என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
அதே போன்று வேலை வாய்ப்பைப்பற்றி பேசி இருக்கிறீர்கள். 15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பில் எந்த சதவீதம் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தானில் 11 சதவீதம் தான். பங்களாதேஷில் 12 சதவீதம் தான். ஆனால் இந்தியாவில் 24 சதவீதம் பேர் காத்திருக்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்று நிதியமைச்சர் இந்த அவையிலே சொல்ல வேண்டும். அதேபோல ஸ்டார்ட்அப் இந்தியா நீங்கள் துவங்கிய ஸ்டார்ட் அப் இந்தியா 95 சதவீதம் தோல்வியில் முடிந்து விட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் பேட்டி அளித்திருக்கிறார்.
இது உண்மையா? இல்லையா? என்று நிதியமைச்சர் இந்த அவையிலே சொல்ல வேண்டும். அதே போன்று முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் ஊதாரி பிள்ளை தொலைப்பது போல பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி தராமல் சாகடித்தது யார்? ஏர் இந்தியாவை தனியாருக்கு தூக்கி கொடுத்தது யார்? எல்ஜசி, வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தூக்கி கொடுக்க சட்டத்தை கொண்டு வந்தது யார்? இதனை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
மனித உரிமையைப் பற்றி, மாநில உரிமையைப் பற்றி, மாநிலத்திற்கான பங்கீடைப் பற்றி இந்த வெள்ளை அறிக்கை மிகவும் மௌனம் காப்பது ஏன்? எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கசக்கி பிழிகின்ற ஒரு கொள்கையை நீங்கள் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறீர்கள். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என்று பேசினால் பிரதமரே சொல்கிறார் வடக்கிற்கும், தெற்கிற்கும் பிரிவினை ஏன் உருவாக்குகிறீர்கள் என்று. நாங்கள் பிரிவினையை உருவாக்கவில்லை. குஜராத் முதல்வராக இருந்த போது நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை இன்னொரு முறை அந்த காணொளியை போய் பார்த்துவிட்டு பேசுங்கள்.
இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கிற உங்கள் ஆயுதத்துக்காக இந்த நாட்டின் ஒற்றுமையை சிதைக்க முயலாதீர்கள். நீங்கள் கைவிட்ட நிறுவனங்களை கேரள அரசு எடுத்து நடத்துகிறது. இது ஒன்றிய அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதேபோல நிதியமைச்சர் அவர்களே அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இந்த 10 ஆண்டுகளில் நீங்கள் தமிழ்நாட்டை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா? இன்று வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன, இன்று காலையில் அருமை நண்பர் மாணிக்க தாகூர் அவர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்கள் இன்று காலை சொன்ன பதில் என்ன?
நிலம் கையகப்படுத்துவதிலே தாமதம், ஒப்பந்தத்தில் தாமதம், கோவிட் காரணம் என்று வரிசையாக அடுக்குகிறீர்கள். இந்த காரணங்கள் எல்லாம் ஹிமாச்சல் பிரதேசம் எய்ம்ஸ்க்கு ஏன் கொடுக்கவில்லை? இந்த காரணங்கள் எல்லாம் நீங்கள் ஆட்சி நடத்துகின்ற மாநிலத்திலே உருவாக்கப்பட்டுள்ள எய்ம்ஸ்க்கு ஏன் பொருந்துவில்லை. உங்கள் நோக்கம் எய்ம்ஸ்க்கு நிதி தராமல் இருப்பது மட்டுமல்ல தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளி தான். மதுரை எய்ம்ஸ் இன்று வரை கிடப்பிலே இருக்கிறது.
வரிசையாக எங்களால் அடுக்கிக் கொண்டே போக முடியும். இரண்டு பெரும் வெள்ளத்தில் மூழ்கி கிடந்த தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதியைக்கூட இப்போது வரை கொடுக்க மாட்டேன் என்று விடாப்படியாக இருக்கிறீர்கள். வெள்ளம் வடிந்து விட்டது. ஆனால் உங்களுடைய வஞ்சக அரசியல் வடியவில்லை. தமிழக மக்கள் அதனை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
இந்த வெள்ளை பேப்பரிலே உள்ள அனைத்து சாராம்சத்தையும் எடுத்துக் கொண்டால் இறுதியாக எழுத்தாளர் அருந்ததிராயுடைய புகழ்மிக்க மேற்கோளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவை இரண்டு பேர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இரண்டு பேர் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நாலு பேர் யார் என்பதை நாடு அறியும். அந்த நாலு பேர் யார் என்று 140 கோடி மக்கள் அறிவார்கள். அந்த நாலு பேரின் கூட்டணியை உடைத்து இந்தியா வெல்லும், வெல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆவேசமாக பேசினார்.