கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜு, கூவத்தூர் விவகாரத்தில் நடிகை திரிஷாவை தொடர்பு படுத்தி பேசி இருந்தார். இந்த செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ஏ.வி ராஜுக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தது. திரிஷாவிற்கு ஆதரவாக சேரன், விஷால், கஸ்தூரி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து திரிஷாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏவி ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் ஏவி ராஜு, அதற்கு மன்னிப்பும் கோரி இருந்தார்.
இருப்பினும் ஏவி ராஜு பேசிய இந்த அவதூறு பேச்சு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. எனவே அடுத்ததாக நடிகை திரிஷா, ஏவி ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் பரவிய இது சம்பந்தமான வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். திரிஷா இந்த விவகாரத்தில் தைரியமாக செயல்பட்டு வரும் நிலையிலும், ஆரம்பத்தில் திரிஷா ஏன் அமைதியாக இருந்தார்? சர்ச்சை வீடியோ வெளியாகி ஒரு நாள் கழித்து திரிஷா இதற்கு பதிலளித்தது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வந்தனர். தற்போது திரிஷா மௌனமாக இருந்ததற்கு காரணம் தெரியவந்துள்ளது. அதாவது திரிஷா மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னம் படப்பிடிப்பிற்கு வரும் நடிகர் நடிகைகளிடம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். இதன் காரணமாகவே நடிகை திரிஷாவிற்கு இந்த சர்ச்சை விவகாரம் மிகவும் தாமதமாகவே தெரிய வந்ததாம். அதன் பிறகு பதட்டமடைந்த திரிஷா, அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் திரிஷாவிற்கு இந்த விவகாரம் தெரியும் முன்பே இயக்குனர் சேரன், திரிஷாவிற்கு ஆதரவாக முதல் ஆளாக குரல் கொடுத்தது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.