தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம்சரண். இவர் கடந்த 2007 இல் சிருதா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய மகதீரா படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ராம்சரண் சிறந்த நடிகருக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார். அதன் பின் ரசிகர்கள் கொண்டாடும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார். அது மட்டும் இல்லாமல் இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து சினிமாவில் தனக்கான அடுத்த தளத்தை தானே அமைத்துக் கொண்டார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் போன்ற படங்கள் இன்றுவரையிலும் பேசப்படுகிறது. கடைசியாக ராம்சரண், ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமும் இந்திய அளவில் பிரபலமாகி பல்வேறு விருதுகளை அள்ளியது. அடுத்ததாக ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ராம்சரண் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்து தனது அடையாளத்தை தனது சிறந்த நடிப்பினால் நிலைநாட்டி வரும் ராம்சரண் தென்னிந்திய ரசிகர்களால் மெகா பவர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் இவர் தனது 39 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் நாமும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.