கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன் தினம் முடிவடைந்தது. இதில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளாவன கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இந்த நிலையில் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீசியது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் ரன் ஏதுமின்றியும் அபிஷேக் ஷர்மா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றளித்தனர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 55 ரன்களிலும் நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.